Type Here to Get Search Results !

மேஷம் ராசி புத்தாண்டு பலன்கள் 2023

 

கிரகநிலை

  • ராசியில் ராகு
  • தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ)
  • சப்தம ஸ்தானத்தில் கேது
  • பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்புதன்(வ)
  • தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன்சனி
  • விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

  • 29-03-2023 அன்று லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
  •  22-04-2023 அன்று குரு பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்
  • 08-10-2023 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
  • 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பொது பலன்கள் :

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் வேளையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். இதுவரை நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் கூடிவரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். சிலர் புதிதாக வீடு மனை வாங்கத் திட்டம் தீட்டுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரின் சுயரூபம் தெரியவரும். அதற்கேற்ப அவர்களின் தொடர்புகளைத் துண்டிப்பீர்கள்.

அதேவேளை உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பல சவால்களும் செலவுகளும் இருந்தபடி இருக்கும். ஆனால் அதற்கேற்பப் பொருள்வரவும் மன தைரியமும் வாய்க்கும். உடல் நலனில் மட்டும் அக்கறை செலுத்துங்கள். மனதுக்குள் தேவையில்லாத பயம் அல்லது அழுத்தத்தைத் தவிருங்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் விலகி சுமுகமான நிலை நிலவும். புதிய முதலீடுகளின் மூலம் சந்தையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணியாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்தியோகத்தில் பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். எதிர்பார்த்த பதவி உயர்வு,சம்பள உயர்வு இந்த ஆண்டு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

ராசிக்குள் வரும் குரு

22.4.2023 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீடான மீனத்திலேயே இருப்பதால் செலவுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஆனாலும் சுபகாரியங்களுக்காகவும் இறைவழிபாட்டுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். நீண்ட காலமாக வெளிநாடு செல்லத் திட்டமிட்டு கைகூடாமல் தவிப்பவர்கள் இப்போது முயன்றால் நிச்சயம் நடக்கும்.

23.4.2023 முதல் இந்த ஆண்டு முடியும்வரை ராசிக்குள்ளேயே குருபகவான் அமர்ந்து பலன்தரப் போகிறார். உடல் எடை கூடும் என்பதால் அதில் எச்சரிக்கை அவசியம். உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குறிப்பாக வாழ்க்கைத்துணையிடம் ஈகோ வேண்டாம். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.

10 - 11 ம் வீடுகளில் சனிபகவான் சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

சனிபகவான் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் பல நல்ல பலன்கள் உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கனிந்துவரும். பணவரவுக்குக் குறைவிருக்காது. சமூகத்தில் உங்களுக்குப் புகழ், கௌரவம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும்.

29.03.2023 முதல் 23.08.2023 வரை சனிபகவான் அதிசாரமாகக் கும்ப ராசியில் சென்று சஞ்சரிக்க இருப்பதால் பலவிதங்களிலும் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?

8.10.2023 வரை ராசிக்குள்ளே ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுபகவானால் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். 9.10.2023 முதல் வருடம் முடியும்வரை ராகுபகவான் ராசியிலிருந்து விலகி 12-ம் வீடான மீனத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கேது 6-ம் வீடான கன்னியில் சஞ்சாரம் செய்வார். இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். முதலீடுகள் லாபகரமாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்பில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

நட்சத்திர பலன்கள்

அஸ்வினி: இந்த ஆண்டு தகுதிவாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணி சரிவர இருந்து வரும். அன்றாட காரியங்கள் செவ்வனே நடைபெறும். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது. உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர்களது நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம்.

பரணி: இந்த ஆண்டு வியபாரிகளுக்கு அளவான லாபம் நிச்சயம் உண்டு. பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது. பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். எனினும் அது தானாகவே சரியாகிவிடும். எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள். பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம். அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

கிருத்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு. பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது. தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம். பெரியோர்களின் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். தொல்லை குறையும்.

மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத மற்றவர்கள் விஷயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டாம். அதே போல, குடும்பம், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விஷயங்களில் தலையிடக் கூடாது. பெற்றோர், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

தேவையில்லாமல், அவசரமாக பேசி விடாதீர்கள். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் உழைக்கத் தயாராக இருந்தால், வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து நீங்கள் வளர ஆதரவாக இருக்கும். எல்லா இடங்களும் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், நீங்கள் எதிலும் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.

வெளிநாடு செல்ல முயற்சி செய்திருபவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குப் பின்னர், அக்டோபர் மாதம் முயற்சிக்கலாம். எங்கு இருந்தாலும், சட்டம், விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும். முயற்சிகள் எல்லாமே வெற்றியைத் தரும். மனதை ஒரு நிலைப்படுத்த, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை செய்யலாம்.

பரிகாரம் - வழிபாடு: மலைமேல் உள்ள முருகனை படியேறி தரிசனம் செய்யுங்கள். முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும்  முருகன் கோவிலுக்குச் சென்று  வரவும் வெற்றிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசைகள்:   கிழக்கு, வடக்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.