காஞ்சிபுரம்,செப்.23:
காஞ்சிபுரத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். வேதாந்த தேசிகன் சுவாமிகள் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்ததையொட்டி திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை செப்.23 தொடங்கி வரும் அக்.3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
📌 ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை... 1,763 காலி பணியிடங்கள் – உடவே விண்ணப்பிக்கலாம்!
முதல் நாள் நிகழ்வாக தேசிகன் சுவாமிகள் தங்கப்பல்லக்கிலும்,மாலையில் சப்பரத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி தினசரி காலையில் தேசிகன் சுவாமிகள் தங்கல்பல்லக்கிலும்,மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி வீதியுலா வருகிறார்.
செப்.29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டமும்,மாலையில் ராமர் திருக்கோலத்தில் தேசிகனின் வீதியுலாவும் நடைபெறுகிறது.அக்.2 ஆம் தேதி விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனமும், வரதராஜசுவாமி தங்கப்பல்லக்கில் அஞ்சலித் திருக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்வுகளும், புஷ்பப்பல்லக்கில் தேசிகன் வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.
மறுநாள் 3 ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.