Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா 108 சங்காபிஷேகம்: லட்சுமி, சரஸ்வதியுடன் ராஜவீதிகளில் உலா வந்த ஆதிகாமாட்சி!


 காஞ்சிபுரம் | மே 23, 2026

காஞ்சிபுரம் பெரியகாஞ்சிபுரம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மிகப்பழைமையான, "ஆதி காமாட்சி ஆதி பீடா பரமேசுவரி" என்று போற்றப்படும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதன் 2-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேக பெருவிழா பக்திப் பெருக்குடன் விமரிசையாக நடைபெற்றது.




சிறப்பு ஹோமங்களும் சங்காபிஷேகமும்:

கோயில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காலையிலிருந்தே கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மகா லக்ஷ்மி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகசாலை பூஜைகள் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றன.


அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய 108 கலசங்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வாக, மங்கள நாதங்கள் ஒலிக்க, இறைவியின் பேரருள் வேண்டி மூலவராம் காளிகாம்பாளுக்கு முறைப்படி 108 வலம்புரிச் சங்காபிஷேகமும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான ஆன்மீகப் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தேவியருடன் ராஜவீதிகளில் வீதியுலா:

விழாவின் தொடர்ச்சியாக, சனிக்கிழமை மாலை உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு மலர் அலங்காரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுப் பிரத்யேகப் பூஜைகள் செய்யப்பட்டன.


அதன் பின்னர், உற்சவர் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள், ஸ்ரீ லட்சுமி தேவி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் தம்பதி சமேதராய் எழுந்தருளி, காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜவீதிகளில் மங்கள வாத்தியங்கள் முழங்க, மிகக் கோலாகலமாக வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார். வீதி எங்கும் பக்தர்கள் தங்களது இல்லங்களின் வாசல்களில் நவதானியங்கள் மற்றும் மாவிளக்கு ஏற்றி, தேவியருக்கு அர்ச்சனை செய்து பயபக்தியுடன் வழிபட்டனர்.


இவ்விழாவிற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும், காளிகாம்பாள் ஆலய அறங்காவலர் குழுவின் தலைவர்  ரவி (எ) ஏழுமலை தலைமையிலான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.