Type Here to Get Search Results !

அட்சய திருதியை நாளின் சிறப்பு - வழிபாடு நேரம்

அள்ள அள்ள குறையாத செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்த மங்கலகரமான நாளை தவற விட்டால், இதற்காக இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டி வரும் என்பதால் அட்சய திருதி நாளில் ஏதாவது ஒரு மங்கல பொருளை தவறாமல் வாங்கி விட வேண்டும் என சொல்லப்படுகிறது.



அட்சய திருதியை நாளில் ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை மகாலட்சுமி முன் அமர்ந்து மனம் உருக பாராயணம் செய்தால் அஷ்டலட்சுமிகளின் அனுகிரகமும் தவறாமல் கிடைக்கும். கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணிற்காக ஆதிசங்கரர் வேண்டிக் கொண்டதால், தங்க நெல்லிக்கனிகளை மகாலட்சுமி மழையாக பொழிய செய்தது அட்சய திருதியை நாளில் தான்.

செல்வ வளம் பெருகச் செய்யும் மிக உன்னதமான நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்து புராணங்களின் படி பலவிதமான சிறப்புக்களையும், முக்கியத்துவமும் பெற்ற நாள் அட்சய திருதியை என குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமியின் அருளை பலரும் பரிபூரணமாக பெற்ற நாள் இது என்பதால், இந்த நாளில் நாமும் வழிபட்டால் நமக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



அட்சய திருதியை நாளின் சிறப்பு :

பாண்டவர்கள் வன வாசத்தின் போது முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் போதிய உணவு சமைத்து கொடுக்க முடியாமல் திரெளபதி கஷ்டப்பட்ட போது, தர்மன், சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரத்தை பெற்றது இந்த அட்சய திருதியை நாளில் தான். வேத வியாசர், விநாயகப் பெருமானுக்கு மகா காவியமான மகாபாரதத்தை உபதேசித்தது அட்சய திருதியை நாளில் தான்.


அட்சய திருதியை  எப்போது?

2023 ம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 22 ம் தேதி வருவதாக நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்காட்டிகளில் ஏப்ரல் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அட்சய திருதியை என குறிப்பிடப்பட்டுள்ளது. திருதியை திதியானது ஏப்ரல் 22 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 23 ம் தேதி வரை உள்ளதால் எந்த நாளை அட்சய திருதியை நாளாக கருத்தில் கொள்ள வேண்டும்? எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும் ? தங்கம் வாங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் எது என்பது பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.


திருதியை திதியானது ஏப்ரல் 22 ம் தேதி காலை 07.49 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 23 ம் தேதி காலை 07.47 மணி வரை உள்ளது. சூரிய உதய நேரத்தில் உள்ள திதியே அந்த நாளின் திதியாக கருதப்படும். இதன் அடிப்படையில் பார்த்தால் ஏப்ரல் 23 ம் தேதி தான் அட்சய திருதியை நாளாக கருதப்படுகிறது. 


ஆனால் ஏப்ரல் 23 ம் தேதி காலை 07.47 மணி வரை மட்டுமே திருதியை திதி உள்ளது. ஏப்ரல் 22 ம் தேதி காலை 07.49 மணிக்கே திருதியை திதி துவங்கி விடுவதால், ஏப்ரல் 22 ம் தேதியையே அட்சய திருதியை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


அட்சய திருதியை வழிபாடு நேரம் :

ஏப்ரல் 22 ம் தேதி காலை 07.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கும், அட்சய திருதியை பூஜை மேற்கொள்வதற்கும் ஏற்ற முகூர்த்த நேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த நேரத்தில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், மல்லிகைப்பூ, அரிசி போன்ற வெள்ளை நிறத்திலான பொருட்கள் மற்றும் மங்கலப் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து, சுவாமி படத்திற்கு முன் வைத்து, பூஜை செய்து வழிபட வேண்டும்.



தங்கமோ, மங்கல பொருளோ வாங்கிய பொருளை சுவாமி படத்திற்கு முன் வைத்து வழிபட்ட பிறகு, அன்றைய நாள் முழுவதும் அந்த பொருளை அங்கேயே வைத்து விட வேண்டும். மறுநாள் எடுத்து, அந்த பொருட்களை நாம் பயன்படுத்த துவங்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.