காஞ்சிபுரம், அக்.6:
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு அருகில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி உற்சவர் தேசிகன் ஞாயிற்றுக்கிழமை ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சின்னக்காஞ்சிபுரத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு அருகில் அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் ஆலயம்.இக்கோயிலின் 756 வது வருடாந்திர மகோற்சவம் அக்.3 ஆம் தேதி தொடங்கி வரும் அக்.13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழாவையொட்டி தினசரி காலையில் உற்சவர் தேசிகன் தங்கப் பல்லக்கிலும்,மாலையில் வெவ்வேறு வாகனத்திலும் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் நான்காவது நாளையொட்டி உற்சவர் தேசிகன் காலையில் தங்கப்பல்லக்கில் பர வாசுதேவன் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.இதனைத் தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வரும் அக்.9 ஆம் தேதி நடைபெறுகிறது.
வரும் 12 ஆம் தேதி தேசிகன் அஞ்சலித் திருக்கோலத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்கு எழுந்தருளி மங்களாசாசனமும் நடைபெறுகிறது.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கந்தப்பொடி வசந்தம் நிகழ்வுசன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி,தக்கார் ப.முத்துலட்சுமி மற்றும் விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் ஸ்ரவணம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.