காஞ்சிபுரம், அக்.5:
காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 3 வது நாள் நிகழ்வாக கோமளவல்லித்தாயார் சமேத சொன்னவண்ணம் செய்த பெருமாள் முத்துக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது யதோக்தகாரி பெருமாள் என அழைக்கப்படும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். இக்கோயிலில் நவராத்திரி திருவிழா நிகழ் மாதம் அக்.2 ஆம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினசரி மாலையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.நவராத்திரி திருவிழாவின் 3 வது நாள் நிகழ்வாக ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாளும்,கோமள வல்லித் தாயாரும் முத்துக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நவராத்திரி திருவிழா நிறைவு பெறும் நாளான அக்.11 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும்,அக்.12 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் காலையில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.