காஞ்சிபுரம், நவ.4:
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து வருவதால் நிகழாண்டு ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் கந்த சஷ்டி விழா இம்மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி காலையில் மூலவருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளையொட்டி திங்கள்கிழமை கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெற்றது.
வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் சண்முகர் சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி திரளான பக்தர்கள் விரதமிருந்து ஆலயத்தை 108 முறை வலம் வந்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொ.கதிரவன் தலைமையில் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.