Type Here to Get Search Results !

தேனம்பாக்கம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத்திருவிழா



காஞ்சிபுரம், டிச.26-


காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் மகா பெரியவர் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ளது பழமையான காமாட்சி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியான மகா பெரியவர் சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31 வது ஆராதனை மகோற்சவத்தையொட்டி தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.


நிகழாண்டு சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி முதல் நாளாக ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மதீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.


அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரம்மபுரீஸ்வரரும்,காமாட்சி அம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 


தெப்பத்தில் மகா பெரியவர் சுவாமிகளின் திருஉருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளையின் தலைவர் எஸ்.குருமூர்த்தி, செயலாளர் பி.ஸ்ரீதர் ஜோசி, பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். 


தெப்பத்திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


முன்னதாக பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகளும் அதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தெப்பத் திருவிழா  வெள்ளிக்கிழமையும்,  சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.