காஞ்சிபுரம், ஜூலை 23:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதி பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5.6.2025 ஆம் தேதி நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வந்தி மலர்களைக் கொண்டு பூஜித்ததால் இங்குள்ள சிவபெருமான செவ்வந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இருந்து வரும் இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தினசரி 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வந்தது. புதன்கிழமை மண்டலபாஷேக நிறைவு நாளையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு கலசாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சங்காபிஷேகமும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்ட்டது.
இதன் தொடர்ச்சியாக மூலவர் செவ்வந்தீசுவரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கே.எஸ்,கெம்பு செட்டியார், ஆலய நிர்வாகிகள் லதா சிவராஜன், வினோத்குமார், எஸ்.வி.பிந்து ரத்னா, எஸ்.வி.சிவகெம்பு ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.