அன்னை ஆண்டாளின் பக்திப் பெருவிழாவைகுண்டம் நோக்கி பக்தியின் வழிப்பாதை
- ஆடிபூரம் -தேவியின் அவதார தினம்
பெரும்பாலான பக்தர்களின் நம்பிக்கையின் படி, பார்வதி தேவி இந்த நாளில் சக்தி வடிவாக (அம்மன் வடிவம்) அவதரித்ததாக கருதப்படுகிறாள். எனவே, தமிழகத்திலும், தென் இந்தியாவின் பல்வேறு அம்மன் ஆலயங்களிலும், ஆடிபூரம் நாள் அம்மன் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
- ஆண்டாள் ஜெயந்தி
ஆடிப்பூரம் வைணவ சமுதாயத்தில் உள்ள 12 ஆழ்வார் துறவிகளில் ஒருவரான ஆண்டாளின் பிறந்த நட்சத்திரம் பூரம் என்பதால் இந்த நாள் ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டாள், லட்சுமி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறார். இளம் பெண்ணாகிய ஆண்டாள், இறைவன் விஷ்ணுவை தன் காதலனாக தேர்ந்தெடுத்து, தன்னுடைய பக்தியால் புனிதம் அடைந்தாள். ஆண்டாளின் பக்தி, விசுவாசம் மற்றும் இறைவன் மீது கொண்ட பிரியம் தமிழர் சமுதாயத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
- ஆடிப்பூரம் 2025 எப்போது?
இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஜூலை 28, திங்கட்கிழமை அன்று வருகிறது. இது ஆண்டாள் அவதரித்த நாளாகும், மேலும் அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் ஆண்டாளை வழிபடுவதும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதும் சிறந்தது.
- பண்டிகையின் சிறப்பு
ஆடிப்பூரத்தின் போது பல அம்மன் கோவில்களில் பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். அலங்காரங்களுக்கு பலவகையான பூக்கள், பழங்கள், மற்றும் குங்குமம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் விரதங்களை கடைபிடித்து, அம்மனை பிரார்த்திக்கின்றனர்.
- ஆன்மிக முக்கியத்துவம்
ஆடிப்பூரம் தமிழர் ஆன்மிக வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மனின் அருளைப் பெற இந்த நாளில் பக்தர்கள் திரண்டு கூடி, தங்களின் மனதில் சாந்தி மற்றும் மகிழ்ச்சியை அடைவர். மேலும், இந்த நாளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளின் போது, மக்கள் தங்கள் குடும்ப நலன் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
இந்த ஆடிப்பூரம் பண்டிகை, பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கைகளுக்கும், குடும்ப நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆண்டாளின் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படும் ஆடிப்பூரம், பக்தர்கள் தங்கள் பக்தியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நாளாகும்.
- வழிபாடு செய்யும் முறைகள்
ஆடிப்பூரம் அன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபடலாம். திருமணம், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபடுவதால் அம்பிகையின் அருள் கிடைக்கும்.
வீட்டில் ஒரு மனைப்பலகையை கிழக்கு-மேற்காக போட்டு, அதன் மீது மாக்கோலம் போட்டு, சிவப்பு நிறத்துணி இருந்தால் விரித்துக் கொள்ளலாம். சிவப்பு துணி இல்லை என்றால் மாக்கோலமிட்டு அப்படியே வைத்து விடலாம்.
அந்த மனைப்பலகையில் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மனின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூப்போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
அம்மன் படத்திற்கு முன் வளைகாப்பிற்கு சீர் வைப்பது போல் சந்தனம், குங்குமம், வளையல், அக்ஷதை, பூ ஆகியவற்றை தனித்தனி தட்டுக்களில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
வளையல்களால் அம்மனுக்கு மாலை போட்டு கட்டி போடலாம்.
பிறகு அம்மனுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லி, அம்மனை அந்த மனையில் எழுந்தருள செய்ய வேண்டும். எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி படிக்கலாம்.
பிறகு அக்ஷதை, பூ ஆகியவற்றை அம்மனின் காலடியில் சம்பித்து வழிபட வேண்டும்.
அம்மனுக்கு ஆரத்தி கரைத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
அந்த அம்மனின் படத்தை எடுத்து, பூஜை அறையில் எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம்.
அந்த மனைப்பலகையை வீட்டின் கூடத்திற்கு எடுத்து வந்து யாருக்கு திருணம் ஆக வேண்டுமோ அல்லது யாருக்கு குழந்தை வேண்டுமோ அவர்களை அமர வைத்து, அம்மனுக்கு செய்தது போல் நழுங்கு வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும்.
அக்ஷதை, பூக்கள் தூவி அவர்களை வாழ்த்திய பிறகு அந்த பெண்ணின் கைகளில் வளையல்கள் மாட்டி விட வேண்டும். அம்மன் அமர்ந்த இடத்தில் நாமும் அமர்ந்து இந்த சடங்குகளை செய்வதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேற நிச்சயம் அம்மன் அருள் செய்வாள்.
பிறகு அப்படியே எழுந்து சென்று பூஜை அறையில் அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அம்மனின் முன்பு விழுந்து வணங்க வேண்டும்.
தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் முந்தானையில் நிரப்பி, பூஜை அறையில் சென்றும் வழிபடலாம்.
இந்த தேங்காயை அடுத்த நாள் ஏதாவது இனிப்பு செய்து சாப்பிடலாம். காரமான உணவுகள் சமைப்பதற்கும், வழக்கமான உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக் கூடாது.
- ஆலயங்களில் ஆடிப்பூரம்
பல ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவை, வீதியுலாவுடன் சிறப்பாக நடைபெறுகிறது. அவற்றுள் சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள், மதுரை மீனாட்சி , சிதம்பரம் சிவகாமி , காஞ்சிபுரம் காமாட்சி, திருகடையூர் அபிராமி, திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டிணம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆடிப்பூர திருநாள் புகழ்பெற்றவை ஆனாலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை என்றே கூறலாம்.
ஆடிப்பூரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவோம். அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், அம்மனை வழிபட்டு, இறையருளைப் பெற வாழ்த்துக்கள்!