காஞ்சிபுரம், ஜூலை 16:
பெரியகாஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா புதன்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கி நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத் தெருவில் ஸ்ரீகாஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் 46 வது ஆண்டு ஆடித்திருவிழா தொடக்கத்தையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனையடுத்து கணபதி பூஜை, கோபூஜை ஆகியனவும், அன்னதானமும் நடைபெற்றது.
- சந்தனக்காப்பு அலங்காரம்
மூலவர் பூஞ்சோலை கன்னியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2வது நாளாக வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பின்னர் லலிதா சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் சௌந்தர்ய லஹரி பாராயணமும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
- நிறைவு நாளாக அம்மன் பல்லக்கில் பவனி
நிறைவு நாளாக வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்த வரப்பட்டு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வும், அன்னதானமும் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மாலையில் அம்மன் பல்லக்கில் மகாசண்டி தேவி அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து காட்சியளிக்கவுள்ளார்.
ஏற்பாடுகளை பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.