காஞ்சிபுரம், ஆக.18:
பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு தெருவில் அமைந்துள்ளது பழமையான அன்னை ரேணுகாம்பாள் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழாவையொட்டி அம்மனுக்கு தினசரி வெவ்வேறு வடிவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் இரவு ஆலய வளாகத்தில் உள்ள வாரியார் அரங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியன நடைபெறுவதும் வழக்கம். நிகழாண்டுக்கான ஆடித்திருவிழா இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.
விழாவின் 8 வது நாள் நிகழ்வாக காலையில் ஜலம் திரட்டுதல்,108 பெண்கள் பால்க்குடங்களை ஊர்வலமாக கச்சபேசுவரர் கோயிலில் இருந்து ஆலயத்துக்கு எடுத்து வந்து சிறப்பு பாலாபிஷேகம், மகா அபிஷேகம், கூழ்வார்த்தல், அன்னதானம், ஊரணிப்பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது .
இரவு உற்சவர் அன்னை ரேணுகாம்பாள் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு வாண வேடிக்ககளும் நடைபெற்றது.
வீதியுலா முடிந்து சுவாமி ஆலயம் வந்து சேர்ந்ததும் கும்ப படையலிடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளும், விழாக்குழுவினரும் இணைந்து செய்திருந்தனர்.