காஞ்சிபுரம், செப்.16:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி புதன்கிழமை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் திருமலையிலிருந்து இறங்கி கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் பெருமாள் சேஷ வாகனத்தில் குழலூதும் கண்ணன் அலங்காரத்தில் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் மீண்டும் மாலையில் ஆலயத்தின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி அருகே பெருமாள் எழுந்தருளியதும் உறியடி உற்சவம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மாட வீதிகள் வழியாக உலா வந்து அஸ்தகிரி தெருவுக்கு எழுந்தருளினார்.அங்கு சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.