காஞ்சிபுரம், அக்.26:
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ளது அகத்திய முனிவர் தங்கியிருந்து வழிபட்ட பெருமைக்குரிய அகத்தீஸ்வரர் ஆலயம். இக்கோயிலின் 7 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலையில் கோ.பூஜை, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் ஆகியன நடைபெற்று சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் மூலவர் அகத்தீஸ்வரர் உமா மகேஸ்வரி அலங்காரத்திலும்,அறம் வளர் நாயகி பச்சைப்பட்டு உடுத்திய அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
பரிவார தெய்வங்களான தர்மகணபதி,பாலமுருகன்,சோமாஸ்கந்தர் ஆகியோர் சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தனர்.மாலையில் உற்சவர்கள் அறம் வளர் நாயகிக்கும் அகத்தீஸ்வரருக்கும் ஆகம விதிகளின்படி திருமணம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சுவாமியும்,அம்மனும் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதன் தொடர்ச்சியாக சுவாமி,அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் சிவவாத்தியங்களின் இசையுடன் நடைபெற்றது.
திருமண நிகழ்வையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான சிவனடியார்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலரும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகக்குழுவினரும்,கிளார் கிராம பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.
.png)