காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு என புதியதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் ஊர்வலம் டிச.6 ஆம் தேதியும் மறுநாள் 7 ஆம் தேதி தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட இருப்பதாக ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிச.8 ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய தங்கத் தேர் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையினரால் செய்யப்பட்டுள்ளது.
இத்தங்கத்தேரின் வெள்ளோட்ட ஊர்வலம் வரும் டிச.6 ஆம் தேதியும் மறுநாள் டிச.7 ஆம் தேதி தங்கத்தேருக்கென தனியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
ஓரிக்கை மகாசுவாமிகள் மணிமண்டபத்தில் செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை அறக்கட்டளை நிர்வாகிகள் மகாலட்சுமி சுப்பிரமணியன், பத்மனாபன்,வலசை.ஜெயராமன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர் அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியன் கூறியது..
ஏகாம்பரநாதர் கோயிலுக்கென உருவாக்கப்பட்டுள்ள தங்கத்தேருக்கென வரும்
- டிச.4 ஆம் தேதி ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கும்.
- டிச.5 ஆம் தேதி சிறப்பு பூஜைகளும், டிச.6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓரிக்கையிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும்.
- தங்கத் தேரை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.
- டிச.7ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் கோயில் வளாகத்தில் நடத்தப்படும்.
- டிச.8 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெறும்.
தங்கத்தேரில் 4 வேதங்கள் 4 குதிரைகளாகவும்,25 அடி உயரம்,10 அடி அகலம், 13 அடி நீளத்திலும்,சாமரப்பெண்கள் 4 பேர் நின்ற கோலத்திலும், பிரம்மா தங்கத்தேரை ஓட்டுவது போலவும் முழுவதும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.தேரில் 16 நந்திகள், 8 கந்தர்வர்கள், 8 சங்குநாத பூதங்களும் இடம் பெற்றுள்ளன.
1600 அடி பர்மா தேக்கில் 5 அடுக்குகள் உடையதாகவும்,சுமார் 2 டன் தாமிரமும், அதன் மீது தங்கமுலாமும் பூசி தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
டிச.6 ஆம் தேதி புதிய தங்கத்தேர் ஊர்வலத்தை காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
.png)