Type Here to Get Search Results !

மிதுன ராசி புத்தாண்டு பலன்கள் 2023

 


கிரகநிலைகள் :

  • பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது
  • சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)
  • அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி
  • தொழில் ஸ்தானத்தில் குரு
  • லாப ஸ்தானத்தில் ராகு  
  • விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

  • 29-03-2023 அன்று பாக்கிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
  • 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
  • 08-10-2023 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்
  • 08-10-2023 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பொதுபலன்கள் :

திட்டமிட்டபடிக் காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த தலைகுனிவுதரும் பிரச்னைகள் நீங்கும். சகோதரர்கள் உங்களோடு ஒத்தாசையாக இருப்பார்கள். அவர்களோடு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிச்சயமாகும். இதுவரை வரவு எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாமல் திண்டாடினீர்களே அந்த நிலை மாறும். சிலர் வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதனான புதன் 7 ம் வீட்டில் அமர்ந்து 7 ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் காலத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுறுசுறுப்படைவீர்கள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். சொத்து பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் திருமணம் நல்ல முறையில் நிச்சயமாகும். புதிய ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய வாகன யோகம் வாய்க்கும்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களால் சின்னச் சின்னத் தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும். எனவே நீங்களே முன்னின்றி அனைத்தையும் செய்யுங்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளும் வசூலாகும். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் ஏப்ரல் மாதம் வரை அலுவலகச் சூழலில் தேவையற்ற தொந்தரவுகள் இருக்கும். உங்கள் மீது வீண் பழி விழும். அனைத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். குருபகவான் 23.4.23 முதல் 10 ம் இடத்திலிருந்து விலகுவதால் அனைத்தும் நலமாகும். மேலதிகாரிகள் கனிவுடன் நடந்துகொள்வார்கள். சலுகைகளும் கிடைக்கும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.

குருபகவான்  பார்வை   நன்மையா...? தீமையா...?

குருபகவான் ராசிக்கு 10 ம் வீட்டில் தொடர்வதால் பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். பராமரிப்புச் செலவுகள் கூடும். தொடங்கும் செயல்களை ஒருமுறைக்கு இருமுறை மேற்கொள்ள வேண்டிவரும். யாரோடும் தேவையில்லாமல் பகைக்க வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்து போகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. சமூகவளைத்தலங்களில் கவனமாக இருங்கள்.

23.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ம் வீடான மேஷத்தில் அமர்வதால் அமர்வதால் பணவரவு திருப்தியாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் பணவரவும் வாய்ப்புண்டு. புதிய வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கு மேல் நல்ல வேலைக் கிடைக்கும். சகோதரர்கள் அன்பாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். சொத்துகளை விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள்.

சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

இந்த ஆண்டும் சனிபகவான் அஷ்டம சனியாகவே தொடர்கிறார். எனவே அனைத்து விஷயங்களிலும் சிறு கவனம் தேவை. முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி ஆகியன ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மனம் சஞ்சலமாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை வந்த வண்ணம் இருக்கும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

மார்ச் 29 ம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ம் தேதிவரை சனிபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்தக் காலகட்டம் உங்களுக்கு மிகவும் பொன்னானதாக அமையும். அனைத்து பிரச்சனைகளும் விலகும். ஆனால் சேமிப்புகள் கரையும். பணப்பற்றாக்குறை அடிக்கடி வந்துபோகும் என்றாலும் மனதில் இருந்த வருத்தங்கள் முற்றிலும் நீங்கும்.

ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?

8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தினரிடம் உங்கள் கருத்துகளை அளவுக்கு மீறித் திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். 9.10.2023 முதல் கேது 4-லிலும் ராகு 10-லும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதனால் தேவையற்ற பயம் வாட்டும். முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அதிகமாகக் கவலைப் படுவதைத் தவிருங்கள்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழிலில் மந்த நிலை இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் சரியாகும். பொருளாதாரத்தில் தொல்லை ஏற்படாது. பணக்கஷ்டம் வராமல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாட பணிகள் சரிவர நடக்கும். தெய்வ வழிபாடு மனத்துக்குத் தெம்பு தரும். அரசு உத்தியோகஸ்தர்கள் விரும்பத்தக்க உத்தரவுகளைப் பெறலாம். அரசாங்க காரியங்களில் தாமதம் தவிர்க்க முடியாமல் போகலாம்.

திருவாதிரை: இந்த ஆண்டு உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கள் நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். நற்பலன்கள் அதிகளவில் நடக்கும் என்றாலும், சிறிதளவு மனசங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரக் குறை உண்டாகாது. அந்தஸ்து பாதிக்கப்படாது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வாழ்வில் சில நற்பலன்கள் ஏற்பட்டே தீரும். அந்த நன்மைகளை நேர்வழியில் சென்றே உங்களால் பெற முடியும் என்பதால் குறுக்கு வழியில் முயற்சிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு ஒரு சறுக்கல் ஏற்படுமானாலும் நிமிர்ந்து விடுவார்கள். விவசாயிகளுக்கு உன்னதமான நேரம் இல்லை என்றாலும் உபத்திரவம் பெரிதாக உருவாகாது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் உண்டாகும்.

மிதுன ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

அதே நேரத்தில் யாருடைய தவறையும் நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் செயலில் நீங்கள் நேர்மையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும், அதை சுமையாக நினைக்கக் கூடாது. முகஸ்துதி நபர்கள் நிறைய பேரை சந்திப்பீர்கள் அவர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். யாரெல்லாம் முகஸ்துதி போடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிக மிக அவசியம்.

பணத்தை கையாளும் பொழுது நிதானமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழிகளில் செல்லலாம் என்று நினைக்காதீர்கள்.

எந்த விஷயம் செய்தாலும் நிதானமாக இருக்க வேண்டும் வழிகாட்டுதல்கள் மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டாலும் அவசரமாக தடாலடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஆவணங்களைப் பொறுத்த விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் வழிபாடு : முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.  னிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது பெருமாள் கோவிலில் இருக்கும் நரசிம்ம தரிசனம் செய்து வாருங்கள். அதே போல பானகம் நைவேத்தியம் செய்து பருகி வந்தால் தடைகள் விலகி வாழ்க்கை இனிமையாகும்.

அதிர்ஷ்ட திசைகள்:  கிழக்கு, வடக்கு

 

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.