Type Here to Get Search Results !

விநாயகர் சதுர்த்தி விரத மகிமை - பூஜை செய்யும் நேரம்

 

முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். விநாயகப் பெருமான் அறிவு, ஞானம், செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை தரும் கடவுளாக வணங்கப்படுகிறார். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய திதியாக ஆனது.

விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விரத மகிமை :

பொதுவாக விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு துன்பங்கள், தடைகள் அனைத்தும் விலக நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். நவகிரக தோஷம், சர்ப்ப தோஷம், குறிப்பாக சனி பகவானால் ஏற்படம் தொல்லைகள், திருமணத் தடை, காரியத் தடை, வறுமை, கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் விநாயகரை வழிபட விலகி விடும். அதிலும் அவருக்குரிய சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும். அனைத்து மாதங்களிலும் வரும் சதுர்த்தி திதி சிறப்பானது என்றாலும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். சதுர்த்தி விரதம் இருக்க துவங்குபவர்கள் ஆவணி மாத வளர்பிறை சதர்த்தியில் துவங்குவது சிறப்பானதாகும்.

விநாயகர் பூஜை செய்யும் நேரம் :

விநாயகர் சதுர்த்தி பூஜை என்பது மாலையில் செய்வதே சிறப்பானதாகும். மாலையில் விநாயகரை வழிபட்ட பிறகு சந்திர தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி. 

அப்படி பார்த்தால் செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி வந்து விடுகிறது. ஆனால் செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்கினாலும், மறுநாள் வரை உள்ளது. 

இதனால் செப்டம்பர் 18 ம் தேதி நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு, விரதம் இருந்து வழிபட வேண்டும். மாலையில் விநாயகர் பூஜைகளை நிறைவு செய்த பிறகு, சந்திர தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.