காஞ்சிபுரம், மார்ச் 19-
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.தொடக்க நாளையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் மற்றும் மலையாள நாச்சியார் ஆகியோர் ஆலயத்திலிருந்து ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளினர்.
பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு திரும்பி வந்து 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.பின்னர் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக வரும் 25 ஆம் தேதி திங்கள்கிழமை மாலையில் மலையாள நாச்சியாரும்,பெருமாளும் ஆஞ்சநேயர் சந்நிதி சென்று வந்த பின்னர் ஆலயத்துக்கு திரும்பி வந்து இருவரும் தனித்தனியாக நான்கு கால் மண்டபத்தில் அமர்ந்து மாலை மாற்றும் வைபவமும் நடைபெறுகிறது.
பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.ஊஞ்சலில் அமர்ந்தவாறும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது.இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவியர், மலையாள நாச்சியார், உற்சவர் வரதராஜப் பெருமாள்,ஆண்டாள் உள்ளிட்ட உற்சவர்கள் அனைவரும் பெருந்தேவித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மறுநாள் 26 ஆம் தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு விஸ்வருப தரிசனக் காட்சியும் நடைபெறுகிறது.
தாயார் சேர்த்தி உற்சவம் எனப்படும் இந்நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.