Type Here to Get Search Results !

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

  திருநெல்வேலி :

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


நெல்லையப்பர் கோவில்  ஆனி பெருந்தேர் திருவிழா இன்று று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.


தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.


இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.


முளைப்பாலிகை

இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவர் புறப்பட்டு அங்கூர விநாயகர் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.


நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


காலை சந்தி பூஜைகள்

திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.



கொடியேற்றம்

கொடிமரம் அருகில் அஸ்திர தேவர் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.


தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனர்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


10 நாட்கள்

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம். 


கலை நிகழ்ச்சிகள்

இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


21-ந் தேதி தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர், தயார் காந்திமதி அம்மன் தேர் உட்பட ஐந்து தேர்கள் நான்கு ரத வீதிகளில் வலம் வர இருக்கிறது. இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகளை  கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.