காஞ்சிபுரம், அக்.28:
காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக ஏகாதச ருத்ர ஹோம பூஜைகள் நடைபெற்று மூலவர் முத்தீஸ்வரருக்கு கலசாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரர் திருக்கோயில்.இக்கோயிலில் 11 சிவாச்சாரியார்களால் 11 கலசங்கள் வைக்கப்பட்டு ஏகாதச ருத்ர ஹோமம் நடைபெற்றது.
ஹோம பூஜை நிறைவில் பூரணாகுதி தீபாராதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மூலவர் முத்தீஸ்வரருக்கு 11 வகையான திரவியங்களாலும் பின்னர் 11 கலசங்களாலும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
ஹோம பூஜைகள் ஆலய அர்ச்சகர் செல்வம் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.ஆலய அறங்காவலர் குழுவின் தலைவர் சரவணக்குமார் ஹோம பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவரகுருக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.