காஞ்சிபுரம், நவ.2:
காஞ்சிபுரம் அருகே இளையனார் வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் டிச.5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே இளையனார் வேலூர் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அரக்கனை வென்ற முருனுடைய திருக்கை வேல் ஊன்றப்பட்ட தனித்தலமாகும்.
சுவாமிநாத சுவாமியார் என்ற மகான் ஜூவன் முக்தி அடைந்த திருத்தலம். இக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் டிசம்பர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுக்கை, விக்னேசுவர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
டிசம்பர் 5 ஆம் தேதி கம்பீரமான ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் பந்தல்கால் நடப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன், ஆய்வாளர் திலகவதி மற்றும் இளையனார் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலக் கண்ணன், அறங்காவலர் குழுவின் தலைவர் து.கோதண்டராமன், அறங்காவலர்கள் வா.மண்ணாபாய்,சு.விஜயன் ஆகியோருடன் இளையனார் வேலூர் கிராம பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.