காஞ்சிபுரம், அக்.28:
பெரியகாஞ்சிபுரம் நெமந்தக்காரத் தெருவில் அமைந்துள்ளது பழனி ஆண்டவர் திருக்கோயில்.இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி இம்மாதம் வீரவாகு காப்புக்கட்டு உற்சவத்துடன் விழா தொடங்கியது.
விழா நடைபெற்ற 6 நாட்களும் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.5 ஆம் நாள் நிகழ்வாக 108 பால்க்குட ஊர்வலம் நடைபெற்றது.பால்க்குடம் எடுத்து வந்த பக்தர்கள் தங்களது கரங்களாலேயே மூலவர் தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதனையடுத்து 6 வது நாள் நிகழ்வாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதியில் உள்ள அரசகாத்த அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும்,ஆலயத்தின் முன்பாக அசுரர்களை சண்முகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் ஆலய வளாகத்தில் தெய்வானை திருக்கல்யாணமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.
வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர் திருமணக்கோலத்தில் திருவீதியுலா வந்தனர்.
புதன்கிழமை மாலையில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் வீதியுலாவுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
.png)