காஞ்சிபுரம், டிச.4:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச.8 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயத்தில் முதல் நிகழ்வாக பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட நீர் புனிதநீர்க்குடங்களில் ஊற்றப்பட்டு அவற்றுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிவவாத்தியங்கள்,மங்கல மேளங்களுடன் புனித நீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமாரதுரை, கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, ஆய்வாளர் அலமேலு, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வ.ஜெகன்னாதன்,சு.வரதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புனிதநீர்க்குடங்கள் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள யாகசாலை மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் ஆலய பூஜகர் கே.ஆர்.காமேசுவரகுருக்கள் தலைமையில் அனுக்கை விக்னேசுவர பூஜை,தனபூஜை,கோ.பூஜை,நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.
ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்,காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆய்வின் போது திமுக காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி,கே.வி.தமிழ்ச்செல்வன்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்,சுகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்
.png)