அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம்(தேய்பிறை) மற்றும் சுக்கில பட்சம்( வளர்பிறை) ஆகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
நற்பலன் தரும் திதிகள்:
ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:
ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம்.
ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
பிறந்த திதிகளில் பலன்
பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்.