காஞ்சிபுரம், பிப்.25:
காஞ்சி சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக அருள்பாலித்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் நிகழ் மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 25 ஆம் தேதி நிறைவு பெற்றது.
தங்கக்கவச அலங்காம்-வைர ஹஸ்தம்
ஜெயந்தியையொட்டி தினசரி சங்கர மடத்தில் வேதபாராயணம், ஆன்மீக இன்னிசைக் கச்சேரிகள் ஆகியனவும் நடைபெற்றன.25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயேந்திரரின் ஜெயந்தியையொட்டி காலையில் ஹோமபூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகள் தங்கக்கவச அலங்காரத்தில், வைர ஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானமும் தங்கக்கவசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சங்கர மடத்தின் நுழைவுவாயிலில் காஞ்சி காமாட்சி அம்மன் சங்கர மட வரவேற்புக் குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.ஜீவானந்தம் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் வழங்கும் விழாவை சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வரவேற்புக்குழு நிர்வாகிகள் ஆறுமுகம்,கோடீஸ்வரன், சரவணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இசைக் கச்சேரி:
மாலையில் சங்கர மடத்தின் கலையரங்கில் ஜெயந்தி குமரேசன் குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் நடைபெற்றது. விஜயேந்திர ஜெயந்தியையொட்டி சங்கரமட வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவர் காமாட்சி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அன்னதானம் :
விஜயேந்திரர் ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயம் முன்பாக சங்கரா கல்லூரி சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,பேராசிரியர் கணபதி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.